அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Monday, October 16, 2006

நம்பர் 1 யாரு?

கடந்த சில வாரங்களாக IRS (Indian Readership Survey) எனப்படும் சர்வேயை கொண்டு குமுதம் தான் தான் நம்பர் 1 என சொன்னது. அதற்கடுத்த குங்குமமும் தான் தான் நம்பர 1 என சொல்லிக்கொள்கிறது. புத்தக விற்பனையை கணக்கில் கொள்ளாமல் வாசகர் எண்ணிக்கையை தங்களுக்காக பயன்படுத்திக்கொள்கின்றன.

ஆனந்த விகடன் தன் வழி தனி வழி என தான் தான் முதலிடம் என சொல்கிறது.IRSற்கான விளக்கத்தையும் ஆ.வி தான் தந்திருக்கிறது.

குங்குமமும் வாங்கிக்கொண்டிருந்த எனக்கு மாலன் போன்றவர்களே (!) அடித்த ஜால்ரா சத்தத்தை தாங்க முடியாமல் நிறுத்தி விட்டேன். போததற்கு கேள்வி பதில்கள், கட்டுரைகள் என எல்லாமே இரட்டை வண்ண மயம். குடும்பப் பத்திரிக்கையாகவே எனக்குப் படவே நிறுத்திவிட்டேன். ஆனால் நிர்வாகத்தின் விளம்பர மற்ற இலவச உத்திகளால் குறுகிய காலத்தில் வாசகர் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டு விட்டது. அல்லது அது போல ஒரு தோற்றம். Vijay Times என ஒரு காலை பத்திரிக்கை மாதாமாதம் தனது வாசகர் எண்ணிக்கையில் நூறு சதவீகத வளர்ச்சி என ஒரே விளம்பர மயம். எப்படி என்றால் இன்று நூறு விற்ற பத்திரிக்கை இருநூறு விற்றால் நூறு சதவிகிதம். 200 நானூறு ஆனாலும் 100%. ஜி.கெளதம் போன்றவர்களின் பரிந்துரைக்காக இந்த வாரம் வாங்கி படிக்க வேண்டும்.

குமுதம் என்றுமே நம்பர் இரண்டு தான். மசாலா பத்திரிக்கையாகவே நிலைநிறுத்திக்கொண்டு பயணத்தினிடையே பொழுதுபோக்கும் புத்தகமாகவே பெரிதும் நிற்கிறது. ஆனால் ஒதுக்கி விட முடியாது. குமுதத்திற்ககு பாதுகாப்பான இடம். ரிப்போரட்டர் சிநேகிதி பக்தி என எல்லாவற்றிலுமே காலூன்ற முடியவில்லை. கடைகளில் தொங்குகிறது அவ்வளவு தான். நெற்றிக்கண் நக்கீரனுக்கு ரிப்பபோர்ட்டர பரவாயில்லை என்றளவில்! தீபாவளி சிறப்பிதழ் 3 புத்தகங்களாக வந்தாலும் எந்த சிறப்பையும் பார்க்க முடியவில்லை. ஆனால் அரசியல் நையாண்டியில் கலக்குகிறது. பாலாவின் கார்ட்டூன்களும் அந்த கடைசி பக்க அரசியல் படக்கதையும் சிரிக்க வைக்கிற அதே நேரத்தில் நம்மை நினைத்து புலம்பவும் சிந்திக்கவும் வைக்கிறது. நிறைய பாடுபட வேண்டும் முதலிடத்துக்கு.

விகடன் அப்படியில்லாமல் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வந்து பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாகவே நிறைய கட்டுரைகளை தொடர்களை தாங்கி வருகிறது. தீபாவளி சிறப்பிதழைக்கூட 2,3 இதழாக குமுதம் போல கொடுத்திருந்தால் 2 பேர் ஒரே நேரத்தில் வாசிக்கலாமே என நினைத்தேன். ஆனால் Readers Digest புத்தகம் போல தமிழகத்திற்கு புதிய வடிவில் வண்ண வண்ண ஓவியங்களாலும் வடிவமைப்புகளாலும் கலக்கியிருக்கிறது விகடன். வித்தியாசமாய்... இளைஞர் படையை உருவாக்கி காலத்தோடு ஒன்றிச்செல்ல விகடன் அன்று விதைத்த விதை அறுவடையாக காண்பது தொலைநோக்கின்,விவேகத்தின், உழைப்பின் பலன்.

வேறென்ன சொல்ல!(போத்தீஸ்-க்குகாக அப்துல் ஹமீது விளம்பர வாசகமாக பேசுவதை இந்த வார விகடனில் நவ்யா நாயரின் பேட்டியில் அதிகமாய் உபயோகப்படுத்தியதை நானும் விகடனுக்காக கொஞ்சம் சொல்லி பாராட்டிக்கிறேன்)

நாணயம் விகடனும், மோட்டார் விகடனும் தனியிதழாக மலர்ந்து விட்ட நிலையில் இந்த தீபாவளியில் அடுத்த விதையையும் தூவியிருக்கிறார்க்ள். அதற்குப் பெயர் பசுமை விகடன். விவசாயிகள் தான் அதன் இலக்கு. நல்ல முயற்சி. தேவையிருப்பதை அறிந்து அல்லது அந்த வெற்றிடத்தை உணர்ந்த வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளும் அரிய முயற்சி!
விகடன் நிறுவனம் தரத்திலும் புதுமை செய்வதிலும் நம்பர் ஒன் என நிருபித்திருக்கிறார்கள். (எனக்கு அவர்களின் அரசியல் சார்பு/நடுநிலை பற்றிய சந்தேகம் உண்டு. ஏற்கனவே இங்கே + மற்றும்
பதிவு செய்திருக்கிறேன்)

வாழ்த்துக்கள் விகடன்!